ரயில் பாதைகளில் விரிசல்: சரிவா, சதியா?
சென்னை, ஜூலை 20: ரயில் பாதைகளில் அடிக்கடி விரிசல் ஏற்படுவதற்கு சதி கும்பல் காரணமா அல்லது தொழில்நுட்பப் பிரச்னை காரணமா என்பது குறித்து ரயில்வே துறை தொடர்ந்து மெüனம் காத்து வருகிறது. விழுப்புரம் அருகே ர


சென்னை, ஜூலை 20: ரயில் பாதைகளில் அடிக்கடி விரிசல் ஏற்படுவதற்கு சதி கும்பல் காரணமா அல்லது தொழில்நுட்பப் பிரச்னை காரணமா என்பது குறித்து ரயில்வே துறை தொடர்ந்து மெüனம் காத்து வருகிறது.
விழுப்புரம் அருகே ரயில் பாதை தகர்க்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து,தமிழகத்தில் ரயில் போக்குவரத்தைப் பாதிக்கக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாக மாறியுள்ளது.தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் அகலப் பாதைகளில் 32-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
விரிசலுக்கு காரணம் என்ன? கடந்த சில ஆண்டுகளில், பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், 82 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது. தமிழகத்தில் இப்போதுள்ள சிறிய பாலங்கள், ரயில் பாதைகளில் மணிக்கு 110 கிலோ மீட்டருக்கு மேல் ரயில்களை இயக்க இயலாது.
ஏனெனில், இதை விட அதிகமான வேகத்தில் ரயில்களை இயக்கினால் தற்போதுள்ள ரயில் பாதை கட்டமைப்புகளுக்கு அதைத் தாங்கும் திறன் இல்லை. ரயில் பாதை விரிசலுக்கு முக்கிய காரணம் தட்பவெப்ப நிலை மாறுபாடே என்று ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரக்கு ரயில்களில் கூடுதல் சுமை: நெரிசலை சமாளிக்க ஆண்டுதோறும் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்கும் வகையில், இப்போது சரக்கு ரயில் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட எடையை விட, கூடுதல் சரக்குகளை வேகன்களில் ஏற்றிச் செல்வதால், தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுகிறது. இது குறித்து, ரயில்வே ஆய்வறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, சரக்கு ரயில் போக்குவரத்துக்கு தனி ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தத் திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அகலப் பாதையில் இரவு ரோந்து: ரயில் பாதையில் விரிசல் மற்றும் தகர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துவரும் சூழலில், கண்காணிப்பை தீவிரமாக்குவது மிகவும் அவசியமாகிறது. எனவே, வருமுன் காக்கும் வகையில், ரயில் பாதைகளில் அந்தந்தப் பிரிவுகளில் இரு மார்க்கங்களிலும் இரவு நேர ரோந்துப் பணியில் "காங் மேன்' உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டுமே 35 ஆயிரம் "டி' பிரிவு (டிராக் மென் உள்பட) பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ரயில் பாதைகளில் விரிசல்களைக் கண்டறிய, அல்ட்ரா சோனிக் சாதனங்களைப் பயன்படுத்தும் சிறப்பு தொழில்நுட்பப் பணியாளர் குழு (யு.டி.எஸ்.) இப்போது அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரயில் பாதைகளில் அடிக்கடி ஏற்படும் விரிசல்கள் குறித்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...