

சென்னை: சென்னையில் பாதுகாப்பின்றி பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் ஆண்டுக்கு சுமார் 500 விபத்துகளில் பள்ளி வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. இந்த விபத்துகளில் சுமார் 330 மாணவர்கள் காயமடைகின்றனர். 40 மாணவர்கள் உயிரிழக்கின்றனர் என்று காவல் துறை அளித்துள்ள புள்ளி விவரங்களில் இருந்து தெரியவருகிறது. இந்த விபத்துகளில் பெரும்பான்மையாக சிக்கிக் கொள்வது ஆட்டோக்கள்தான்.
அரசின் கடுமையான நடவடிக்கையின் காரணமாக, பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் விபத்தில் சிக்குவது பெருமளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களை வாடகை ஆட்டோக்களும், வேன்களும்தான் ஏற்றிச் செல்கின்றன. இந்த வாகனங்களில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றன.
இதன் காரணமாக ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக மாணவர்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.அதோடு, வேகக் கட்டுப்பாடின்றி சாலையில் விரைவாகச் செல்லும் இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுப்பாடு இல்லை: ÷பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்களில் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்,வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், 55 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது, அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் மட்டும் மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.
ஆனால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு இதுபோன்று கடுமையான விதிமுறைகளை அரசு விதிக்கவில்லை. இதனால் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகிறது.
விழிப்புணர்வு தேவை:÷சென்னையில் இயங்கும் சுமார் 60 ஆயிரம் ஆட்டோக்களில் பாதிக்கும் மேற்பட்டவை, காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்கின்றன. மாணவர்களைப் பள்ளியில் இறக்கிவிட்டதும் அடுத்த சவாரியைப் பிடிக்கும் நோக்கத்தில் வேகமாகச் செல்கின்றனர். இந்த வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், பெற்றோர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட வாகனங்களிலேயே தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இப்பிரச்னையில் விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது காவல் துறையும், போக்குவரத்துத் துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம், பெற்றோர்களும் தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பான வாகனங்களில் அனுப்பிவைக்க வேண்டும். இதற்கு அனைவரிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.