டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

போக்குவரத்து போலீஸாரின் தடை நடவடிக்கை: முடங்கும் சென்னை துறைமுகம்

போக்குவரத்து போலீஸாரின் தடை நடவடிக்கைகளால் சென்னைத் துறைமுக வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை அடிக்கடி ஏற்படுவதாக துறைமுக உபயோகிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

News image
சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு காத்திருக்கும் கண்டெய்னர் லாரிகள்.
Updated On :13 பிப்ரவரி 2017, 11:35 pm

முகவை க.சிவக்குமார்

போக்குவரத்து போலீஸாரின் தடை நடவடிக்கைகளால் சென்னைத் துறைமுக வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை அடிக்கடி ஏற்படுவதாக துறைமுக உபயோகிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் என சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்களின் போக்குவரத்து எண்ணூர் விரைவு சாலை மூலமாகவே நடைபெற்று வருகிறது. மேலும் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டிய போக்குவரத்துப் போலீஸார் இந்தப் போக்குவரத்துக்கு பல்வேறு தடைகளை விதித்து வருவதாகவும், இதனால் சென்னைத் துறைமுகமே அடிக்கடி முடங்கி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
அடிக்கடி தடை விதிக்கும் போலீஸார்: இதுகுறித்து சுங்கத் துறை ஏஜென்சியைச் சேர்ந்த என்.கஜேந்திரன், ஜெகநாதன் ஆகியோர் கூறியது: கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எர்ணாவூர் பாரதியார் நகரில் கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் கடற்கரையில் தேங்கியது.
இதனை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனைப் பார்வையிட முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும்போதெல்லாம் கண்டெய்னர் லாரிகளின் போக்குவரத்தை போலீஸார் நிறுத்தி வைத்தனர். இதனால் அடுத்தடுத்த தினங்களுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் எர்ணாவூரில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, எண்ணூர் விரைவு சாலையில் கண்டெய்னர் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதேபோல் துறைமுகத்திலிருந்து ஒரு லாரியும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதன் விளைவாக, குறிப்பிட்ட கப்பல்களுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் திட்டமிட்டபடி அனுப்ப இயலவில்லை. சிலர் கூடுதலாக தண்டக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தத் தடையால் சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு கண்டெய்னர் லாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.