குடிநீர் விநியோகத்தில் போதிய பராமரிப்பின்மை காரணமாகவும், நிலத்தடி நீர், மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாலும் கிராமப் புறங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஊராட்சிப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, மேல்நிலை தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை தேக்கத் தொட்டிகளையும், குழாய் இணைப்புகளையும் ஊராட்சி நிர்வாகங்கள் முறையாக பராமரிப்பதில்லை. பல இடங்களில் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதுதவிர மேல்நிலைத் தேக்க தொட்டிகளை நிரப்புவதற்காக போடப்படும் மின்மோட்டார்கள் அவை நிரம்பியவுடன் நிறுத்தப்படுவதில்லை. இதனால் மணிக்கணக்கில் குடிநீர் வீணாகி சாலைகளில் வழிந்தோடுகிறது.
இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற விவசாயக் கிணறுகளில் இருந்து அரசு அனுமதியின்றி தினமும் மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு லாரிகள் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள விவசாயக் கிணறுகளும் வறண்டு விடும். இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது குறித்து அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகளும், குறைந்த அளவே வருவாய் உள்ள விவசாயத்தை கைவிட்டு தங்களது கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மணிமங்கலம், பண்ருட்டி, கண்டிகை, எழிச்சூர், வடமங்கலம் பூதேரிபண்டை, செங்காடு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பண்ருட்டி கண்டிகை பகுதியில் ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் நிலத்தடி நீர் திருடப்பட்டு வருகிறது.
இது தவிர மண்ணிவாக்கம், வண்டலூர் ஏரிக்கரையை ஓட்டியுள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயக் கிணறுகளில் இருந்து தொடர்ந்து நிலத்தடி நீர் திருடப்பட்டு வருகிறது.
இதில் ஈடுபடுவோர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் கிராமப்புறங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.