தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தினமணியின் முன்னாள் ஆசிரியருக்கு "தமிழ் திரு' விருது

தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்கு, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த "யாதும் தமிழே' விழாவில் "தமிழ் திரு' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 10:44 pm

DIN

தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்கு, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த "யாதும் தமிழே' விழாவில் "தமிழ் திரு' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தனது நான்காவது நிறைவையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் நடத்திய விழாவில் தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர் கி. ராஜநாராயணன், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், கல்வியாளர் பிரபா கல்விமணி, விஞ்ஞானி என். வளர்மதி ஆகியோருக்கு ஆந்திரா தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து "தமிழ் திரு' விருதுகளை வழங்கினார்.
தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அனைத்து விவசாயச் சங்கங்களின் தலைவர் பி.ஆர். பாண்டியன், நீதிபதி அரி பரந்தாமன் ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட குழு விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் விவசாயம், அரசியல், இறை நம்பிக்கை உள்ளிட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்தார். கேரள முதல்வரை அண்மையில் சந்தித்தது போல மேலும் பல முதல்வர்களை சந்திப்பேன் என்றும், ரஜினி உள்ளிட்ட ஏனைய பலருடனும் அரசியல் குறித்து கலந்து ஆலோசிப்பேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Story image

"தி இந்து' தமிழ் நாளிதழின் 4-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் (இடமிருந்து) கல்வியாளர் பிரபா கல்விமணி, கி.ரா.பிரபாகர் (கி.ராஜநாராயணனின் மகன்), விஞ்ஞானி என்.வளர்மதி, தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், நடிகர் கமல்ஹாசன், நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்.

இதழியலின் அவசியம்

"தி இந்து' தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் வகையில் "யாதும் தமிழே' என்ற 2 நாள் விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து "யாதும் தமிழே' விழாவின் லோகோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். புத்தர் கலைக்குழுவின் பறையாட்டம் நடந்தது.
"யாதும் தமிழே' விழாவில் இதழியலின் அவசியம் குறித்து நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியது:
பத்திரிகைகள் இல்லாத அரசாங்கம் வேண்டுமா, அரசாங்கம் இல்லாத பத்திரிகைகள் வேண்டுமா எனக் கேட்டால் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன் என அமெரிக்க அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சன் 150 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். இதன் மூலம் இதழியலின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை பத்திரிகைகளுக்கும் தர வேண்டும் என இந்தியாவின் இதழியல் தந்தை என போற்றப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி கூறினார். ஊடகங்களின் அவசியத்தை இது நமக்கு உணர்த்துகிறது. ஏனெனில் பள்ளி, கல்லூரிகளில் படிக்க முடியாதவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வாய்ப்பை பத்திரிகைகள் தருகின்றன.
"தமிழ் திரு' விருது பெறும் ஐவரின் சாதனைகளை வேறொருவர் முறியடிக்க இன்னொரு நூறாண்டு வேண்டும் என்று நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.