/

செல்லப் பிராணிகள் வளர்ப்பில் அதிகரிக்கும் ஆர்வம்

சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் பெருகி வருவதன் காரணமாக ப்ளூ கிராஸில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 1,800 நாய், பூனைகளை பொதுமக்கள் தத்தெடுத்துள்ளனர்.

News image

சென்னை, வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ கிராஸ் அமைப்பில் நாய்க் குட்டியை வளர்க்க ஆர்வத்துடன் தேர்வு செய்யும் குழந்தைகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 6:42 am

பா. இளையபதி

சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் பெருகி வருவதன் காரணமாக ப்ளூ கிராஸில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 1,800 நாய், பூனைகளை பொதுமக்கள் தத்தெடுத்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி செல்லும் சாலையிலும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்திலும் ப்ளூ கிராஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கேப்டன் சுந்தரம் என்பவரால் கடந்த 1959-இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 1964-இல் அரசின் அங்கீகாரத்தைப் பெற்று இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட, காயமடைந்த நாய், பூனை, குதிரை, மாடு, பறவைகளை மீட்டு சிகிச்சையளித்து பராமரித்து வருகிறது.
விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ், மருத்துவமனை வசதிகள் கால்நடை மருத்துவர்கள் ப்ளூ கிராஸிடம் உண்டு. விலங்குகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, அவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளையும் இந்த அமைப்பு செய்து வருகிறது. 
இப்போது ப்ளூ கிராஸிடம் நாய், பூனை, எருமை, மாடு, குதிரை , பன்றி 93, அணில், முயல், பறவைகள் என மொத்தம் சுமார் 1700 வளர்ப்புப் பிராணிகள் பராமரிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக இங்குள்ள வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனைகளைத் தத்தெடுத்து வளர்க்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கைவிடப்படும் பிராணிகள்: இதுகுறித்து ப்ளூ கிராஸ் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் கூறியது: உரிமையாளர்கள் சிலர் தங்களது வளர்ப்புப் பிராணிகளுக்கு வயதானால் அவற்றை சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால், அவை வாகனங்களில் அடிபடும் நிலை உள்ளது. குறிப்பாக சாலைகளில் திரியும் நாட்டு நாய்களே அதிக அளவில் வாகனங்களில் அடிபடுகின்றன. அவற்றுக்குப் போதிய சிகிச்சை இல்லாததால் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற காயம்பட்ட நாய், பூனை, மாடு, குதிரைகள் உள்ளிட்டவற்றையும், உணவின்றித் தவிக்கும் நாய், பூனைக் குட்டிகளையும் மீட்டு சிசிச்சை அளித்து பராமரித்து வருகிறோம்.
கடந்த 2017-18 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 10,854 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த தலைமுறையைக் காட்டிலும், இந்த தலைமுறையினருக்கு பிராணிகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ளதுடன், அவற்றைப் பாதுகாப்பதிலும் அக்கறை உள்ளது. 

1,800 பிராணிகள் தத்தெடுப்பு: நாய், பூனைகளை மட்டும் இலவசமாகத் தத்தெடுக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தத்தெடுப்பவரின் விவரங்களைப் பெற்றுக் கொண்டு இலவசமாக அவர்களுக்கு பிராணிகளை வழங்குகிறோம். இதன்படி, மாதத்துக்கு சுமார் 150 என கடந்த ஓராண்டில் மட்டும் 1,800 நாய், பூனைகள் பொதுமக்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தத்தெடுக்கும் பிராணிகளுக்கு இலவச சிகிச்சையும், கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
பாதிக் கட்டணத்தில் அவற்றுக்கு நோய்த் தடுப்பு ஊசிகள் போடப்படுவதுடன், தத்தெடுக்கும் மக்களுக்கு அவற்றை எவ்வாறு வளர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அடிபட்ட விலங்குகளை மீட்கவும், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் 044-22354959 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.