/

இளைஞர்களைத் தாக்கிய இரு காவலர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்

நகை திருட்டு விவகாரத்தில் பொய்ப் புகாரின் பேரில் இளைஞரைத் தாக்கிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம்

Updated On :8 ஜூன் 2018, 4:29 am IST

நகை திருட்டு விவகாரத்தில் பொய்ப் புகாரின் பேரில் இளைஞரைத் தாக்கிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்டம், கூடல்புதூர் மோகன் மகன் சிலம்பரசன் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கூடல்புதூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய பக்கத்து வீட்டில் மதுரை மாவட்டம், புதூர் காவல் நிலைய குற்றப் பிரிவு முதல்நிலைக் காவலர் பிரபு குடியிருந்தார். சில காரணங்களால் எனக்கும் அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. 
நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் பொய்ப் புகாரின்பேரில், என்னையும், எனது நண்பர் விமலையும் காவலர்களான பிரபுவும், ராஜேஷும் கடந்த 2012 பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி கரியமேடு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு , என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கடுமையாகத் தாக்கினர். எனது நண்பர் விமலிடம் பணத்தைப் பறித்துக் கொண்டனர். 
நகை திருட்டுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் பழிவாங்கும் நோக்கில் பொய் புகாரைப் பெற்று என்னை கடுமையாகத் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர்கள் இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.1 லட்சம் அபராதம்: இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி டி.ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 
இந்த விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் சிலம்பரசனை காவலர்கள் பிரபுவும், ராஜேஷும் கடுமையாகத் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. 
எனவே, அவர்கள் இருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும், அபராதத் தொகையான ரூ.1 லட்சத்தை காவலர்கள் இருவரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து சிலம்பரசனுக்கு வழங்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.