சென்னையில் ஜவுளிக் கடையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளை திருடிய பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் கோபால். இவர் அசோக்நகர் 10- ஆவது அவென்யூவில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு செவ்வாய்க்கிழமை மாலை நான்கு பெண்கள் திருமணப் பட்டுப் புடவை எடுக்க வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உள்ள திருமண பட்டுப் புடவைகளை எடுத்துக் காட்டுமாறு கூறினர். அதன்படி, கடை ஊழியர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உள்ள பட்டுப் புடவைகளை எடுத்துக் காட்டினர்.
வெகுநேரம் பட்டுப்புடவைகளை பார்த்த பெண்கள், தங்களுக்குப் பிடித்தமான பட்டுப்புடவைகள் அங்கு இல்லை எனக் கூறி புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பின்னர், கடை ஊழியர்கள் பட்டுப் புடவைகளை எடுத்து வைத்தனர். அப்போது அந்த பெண்களுக்குக் காட்டிய பட்டுப் புடவைகளில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 16 பட்டுப்புடவைகள் திருடு போனதை அறிந்து கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் கோபால், அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் ஜவுளிக்கடைக்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் அந்த ஜவுளிக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் இரண்டு பெண்கள் பட்டுப்புடவைகளை பார்ப்பது போல் கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்புவதும், அந்த நேரத்தில் மற்ற இரண்டு பெண்கள் 16 பட்டுப்புடவைகளை அடுத்தடுத்து திருடி வெளியே கொண்டு சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த பெண்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









