நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள்- பாவண்ணன்; பக். 504; ரூ. 575; கிழக்கு பதிப்பகம், சென்னை- 600 014, ✆ 044-4200 9603.
இந்தத் தொகுப்பின் ஆசிரியர் தான் பணிபுரிந்த கர்நாடக மாநிலத்தின் துங்கபத்திரை நதிக்கரையோர தொழிலாளரிடம் எதேச்சையாக ஒரு கதையைக் கேட்கிறார்; அந்தக் கதையே இந்தத் தொகுப்பு வெளிவரக் காரணம். அனைத்து மாநில மக்களுக்கும் நாட்டுப்புற கர்ண பரம்பரைக் கதைகள் இருக்கும். நீதி போதனைகளை உபதேசிப்பதாக மட்டும் அவை இருக்காது. சுவாரஸ்யமாகவும், அந்த மக்களின் மனப்போக்கை சொல்லும் விதமாகவும் அவை அமைந்திருக்கும்.
இந்தத் தொகுப்பில் அப்படிப்பட்ட 25 கதைகள் உள்ளன. அனைத்துக் கதைகளுமே ஓர் ஊரில், ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில் என்றே தொடங்குகின்றன. அதுவே எல்லாக் கதைகளின் எளிமைக்கும், அதில் நாம் லயிப்பதற்கும் ஆரம்பக் காரணமாக இருக்கிறது. மேலும், அனைத்துக் கதைகளும் தொய்வில்லாத நடையில், வாசிக்க சலிப்பு தராத போக்கில், அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பில் பயணிக்கிறது.
எறும்பு பேசுகிறது; இளவரசியின் வயிற்றில் பாம்பு வளர்கிறது; கரடி சாணத்தில் வெள்ளி நாணயம் கிடைக்கிறது; ஆட்டுக்குட்டியைக் கட்டிப்போட்டால் குளிர் குறைகிறது -இதுபோன்ற கற்பனைக்குள் அடங்காத சம்பவங்களின் நாட்டுப்புறக் கதைகள்தான் இந்தத் தொகுப்பை எல்லோருக்குமான வாசிப்புத் தலமாக நிலை நிறுத்தி இருக்கிறது.
மேலும், இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சம் என்னவென்றால், இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கதைகளுமே பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களுக்குமானதாகவும் இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








