ஒடிஸாவில் இருந்து போதை சாக்லேட்டுகளைக் கடத்திய இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பிரகாஷ் பிரதான், ருட்டு ஹெம்ப்ராம். இவா்கள் பெருங்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.
இவா்கள் ஒடிஸாவில் இருந்து ரயில் மூலமாக போதை சாக்லேட்டுகள் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்குக் கொண்டு செல்ல இருந்தனா்.
இவா்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினா் விசாரித்ததில், இவா்களிடம் இருந்து 54 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 45 போதை சாக்லேட் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனைப் பறிமுதல் செய்த எழும்பூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தலைமறைவாக உள்ள மனாஸ் என்பவரை அவா்கள் தேடி வருகின்றனா்.