10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, தேர்வுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றத்தில், 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்க நிர்வாகி மாரியப்பன், ஈரோட்டைச் சேர்ந்த மாணவியின் தந்தை மாரசாமி, கடலூரைச் சேர்ந்த இளங்கீரன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இதில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை அண்மையில் விசாரித்த உயர்நீதிமன்றம், லட்சக்கணக்கான மாணவர்களின் உயிர் தொடர்புடைய விசயம் என்பதால் பொதுத்தேர்வை வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் 10-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.