திருவொற்றியூரில் இன்று காலை வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது.
திருவொற்றியூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலையில் பருவநிலை காரணமாக லேசான பனி மற்றும் இருட்டாக இருந்ததால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்போது பொதுமக்கள் அதிகம் வரவில்லை, மிகக் குறைந்த அளவில் வந்திருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் காலியாகவே இருந்தன.
போலீசார் 100 மீட்டருக்கு அப்பால் வாக்காளர்கள் வாகனங்களை நிறுத்த கூறியிருந்தனர். வாக்குச்சாவடிக்கு உள்ளே போகும் முன் சானிடைசர், முகக்கவசம், வெப்பமானி மூலம் உடல் சூடு போன்றவற்றை அறிந்தபின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக காலை நேரத்தில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது.
இதனிடையே திருவொற்றியூர் விம்கோ நகர் அரசு ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பூத் ஸ்லிப் உரியவர்களுக்கு வழங்கப்படாமல் கட்டு கட்டாக வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.