திருவொற்றியூர்: தென்மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் 43 வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட பட்டய போட்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இன்று திருவொற்றியூரில் தொடங்குகிறது.
பகல்-இரவு போட்டியாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் திருவொற்றியூரில் உள்ள அரசு கல்லூரி பூப்பந்தாட்ட திடலில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கு பெறுகின்றனர். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற் கோப்பையுடன் ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியினை திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவ்விழாவில் தமிழக அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் மாதாவரம் எஸ்.சுதர்சனம், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிக்க: ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
வெளிமாநிலங்களில் வந்துள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் தங்குவதற்கான விரிவான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் செய்துள்ளார். அதேபோல் அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 172 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அணியிலிருந்து 20 விளையாட்டு வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் சீருடை, காலணி வழங்கி வெற்றி பெற வாழ்த்தினார். நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு விளையாட்டு மைதானம் சீராக்கப்பட்டது. இந்த போட்டியை காண ஏராளமான விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.