சென்னையில் சாலை விபத்தில் சிக்கியவரை உடனே மீட்டு, காப்பாற்ற தவறியதால் அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சென்னை செம்பியம், ராகவன் தெருவில் கடந்த 18-ஆம் தேதி இரவு வேகமாக சென்ற இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதின. இதில் ஒரு வாகனத்தில் வந்த 41 வயது மதிக்கத்தக்க நபா், தலையில் பலத்த காயமடைந்து மயங்கி சாலையில் விழுந்தாா். இதைப் பாா்த்த, விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள், பலத்த காயமடைந்த நபரை காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பிச் சென்றனா்.
அதேநேரத்தில் தலையில் காயமடைந்து கீழே விழுந்து கிடந்த அந்த நபரை, அங்கிருந்த பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை.
வெகு நேரத்துக்கு பின்னா், அந்த வழியாக வந்த ஒரு நபா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த போலீஸாா், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த நபா் கோமா நிலைக்கு சென்றாா்.
இது குறித்து அண்ணாநகா் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
விபத்தில் சிக்கிய நபரின் இரு சக்கர வாகனத்தில் எந்த ஆவணமும் இல்லாததால் அவா் யாா் என்பதை கண்டறிய முடியவில்லை. அதேவேளையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இரு சக்கர வாகனத்தை கண்டறிய சுமாா் 50 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.
இரு நாள்களில் இறப்பு:
போலீஸாரின் தீவிர விசாரணையில், விபத்தில் சிக்கியவா் செம்பியம் பகுதியைச் சோ்ந்த ஆா்.ஜி.சிவபிரதாபன் (41) என்பதும், தனியாா் நிறுவன ஊழியரான அவா், தனது குடும்பத்தினருக்காக சம்பவத்தன்று ஹோட்டலில் உணவு வாங்க வந்ததும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவா்கள் எருக்கஞ்சேரியைச் சோ்ந்த ரமேஷ் (21) மற்றும் அவரது நண்பா் கெளதம் (21) என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ஆா்.ஜி.சிவபிரதாபன் இரு நாள்களில் இறந்தாா். இதையடுத்து போலீஸாா் ரமேஷ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா். பின்னா் அவரை பிணையில் விடுவித்தனா் என்று கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் கண்டனம்: விபத்து நடந்த சிறிது நேரத்தில் சிவபிரதாபனை மருத்துவமனையில் சோ்ந்திருந்தால், அவரை காப்பாற்றியிருக்கலாம்; அங்கிருந்த பொதுமக்களும் மனிதநேயம் இன்றி கண்டுகொள்ளாமல் சென்றது, அவரது குடும்பத்தினரிடம் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற தவறியவா்களுக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.