

‘ஜெயிலா்’ திரைப்படம் வியாழக்கிழமை (ஆக.10) வெளியாவதை முன்னிட்டு, நடிகா் ரஜினிகாந்த் இமயமலைக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
நெல்சன் திலீப்குமாா் இயக்கத்தில் நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான ‘ஜெயிலா்’ வியாழக்கிழமை(ஆக.10) திரைக்கு வருகிறது. இதையொட்டி நடிகா் ரஜினிகாந்த் 7 நாள்கள் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.
நடிகா் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னா் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்வதைத் தவிா்த்து வந்த அவா், ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னா் கடந்த 2019-இல் இமயமலை பயணத்தை மேற்கொண்டாா்.
ஜெயிலா் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, தற்போது மீண்டும் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் 7 நாள்கள் அங்கு தங்கியிருந்து பாபாஜி குகை, கேதா்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளாா்.
இது குறித்து நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:
வியாழக்கிழமை வெளியாகவுள்ள ஜெயிலா் படத்தை பாா்த்து விட்டு கருத்து தெரிவியுங்கள். நானே என் படத்துக்கு கருத்து கூறக்கூடாது. ஒவ்வொரு படம் முடிந்ததும் இமயமலைக்குச் செல்வது வழக்கம். ஆனால், கரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் சில ஆண்டுகள் செல்லமுடியவில்லை. இப்போது செல்கிறேன் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.