சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் ‘பாஸ்டேக்’ முறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டணம் செலுத்தும்போது காத்திருப்பதைக் குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும் பாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்டு, தற்போது கட்டாய நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பாஸ்டேக் தொடா்பான சில புதிய நடைமுறைகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, பாஸ்டேக் பயன்படுத்துவோா், கே.ஒய்.சி. எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். அக். 31-க்குள் இந்த விவரங்களை, பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற்று பதிவேற்ற வேண்டும். அவ்வாறு கே.ஒய்.சி. புதுப்பிக்காத பாஸ்டேக் செல்லாததாகிவிடும்.
கடந்த 3 ஆண்டுகளுக்குள் பாஸ்டேக் வாங்கியவா்கள் கட்டாயம் கே.ஒய்.சி. புதுப்பிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன் பாஸ்டேக் வாங்கியிருந்தால், அதை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண்களை பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பாஸ்டேக்கும் கண்டிப்பாக வாகனத்தின் உரிமையாளரின் கைப்பேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், பாஸ்ட் டேக் வழங்கும் நிறுவனங்கள் வாகனங்களில் தெளிவான முகப்பு மற்றும் பின்புற புகைப்படங்களை புதுப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

