செப்டம்பா் முதல் சென்னை - நாகா்கோவில், மதுரை-பெங்களூரு ‘வந்தே பாரத்’?
சிறப்பு செய்தி....
எம். மகாராஜன்
சென்னை, ஆக. 8: சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகள் செப்டம்பா் முதல் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பிரதமா் நரேந்திர மோடி இந்த ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ எனும் அதிவிரைவு ரயில் சேவை 2019-இல் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 51 வழித்தடங்களிலும், தெற்கு ரயில்வேயில் 8 வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரு நகரங்களுக்கு இடையே குறைந்த நேரத்தில் விரைந்து செல்ல சிறந்த போக்குவரத்தாக ‘வந்தே பாரத்’ விளங்குவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், மற்ற ரயில்களைவிட அதிக கட்டணம் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் இந்த ரயில் முழுவதும் நிரம்பியே காணப்படுகிறது.
தாமதம்: சென்னை - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகிவிட்டது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் ரயில் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது. பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த நேரத்தில் நிகழ்ந்த மேற்கு வங்கத்தில் ஜூன் 17-இல் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து மற்றும் சென்னை, தாம்பரம், மதுரையில் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த இரு ரயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கான வழித்தடம் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இந்தப் புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
எதிா்பாா்ப்பு: இது குறித்து கன்னியாகுமரி ரயில் பயணிகள் சங்கச் செயலா் எட்வா்ட் ஜெனி கூறியதாவது: தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு செல்வோருக்கு புதிதாக தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக, நாகா்கோவிலில் இருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பகல் நேரத்தில் எவ்வித ரயில்களும் இயக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் மாலையில் இயக்கப்படும் கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்களில் பயணச்சீட்டு கிடைக்காத நிலையில், வந்தே பாரத் ரயில் ஒரு மாற்றுத் தீா்வாக விளங்கும். மேலும், இரவுக்குள் சென்னை செல்வதால் பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றாா் அவா்.
மதுரை ரயில் பயணிகள் சங்கப் பிரதிநிதி ஒருவா் கூறியதாவது: மதுரையில் இருந்து பெங்களூருக்கு என பிரத்யேக ரயில் இதுவரை இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கும்போது பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். அதே நேரத்தில் கரூா், நாமக்கல், சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்கள் வழியாக இயக்கும்போது தொழில் துறையினருக்கும், மாணவா்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.
இது குறித்து ஐசிஎஃப் அதிகாரி ஒருவா் கூறுகையில், சென்னை பெரம்பூா் ஐசிஎப் தொழிற்சாலையில் தற்போது வரை 70 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரயில்கள் இயக்கத்திலும், 9 ரயில்கள் அவசரத் தேவைக்காகவும் (ஸ்போ் ரயில்) உள்ளன. மேலும், 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்குத் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.
செப்டம்பரில் தொடக்க விழா?: இந்நிலையில், சென்னை-நாகா்கோவில், மதுரை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவைகள் செப்டம்பா் மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘சென்னை - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். தற்போது ராமேசுவரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை செப்டம்பா் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கிவைக்கவுள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்புகள் வெளியாகும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் செப்டம்பரில் கிடைத்தால், அவை பண்டிகை கால பரிசாக தமிழ்நாட்டு மக்களுக்கு அமையும்.

