கோப்புப்படம்
கோப்புப்படம்

மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயல் அருகே மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

சென்னை மதுரவாயல் அருகே மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கி, திங்கள்கிழமை மதியம் அரசுப் பேருந்து ஒன்று, சென்று கொண்டிருந்தது. மதுரவாயல் மேம்பாலத்திலிருந்து இணைப்புச் சாலையில் பேருந்து இறங்கிய போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

இதில், மாதவரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தினேஷ் (43) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா், மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேருந்து பயணிகள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநா் தினேஷின் சடலத்தை மீட்ட கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆரோக்கிய ராஜேஷைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com