சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பி.எச்டி. பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ. 1 லட்சம் உதவித் தொகை

ரூ. 1 லட்சம் வீதம் 50 மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு
Published on

நிகழாண்டு முதல் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்தத் துறையின் செயலா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட உத்தரவு:

மாற்றுத்திறனாளி மாணவா்களின் சிறப்புக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதாவது, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வீதம் 50 மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுகீட்டில் ‘முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு, திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, முழுநேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புக்கான, ஆய்வறிக்கை வாய்மொழி தோ்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டும். ரூ. 1 லட்சம் தொகை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்கள் மூலம் நேரடியாக மாற்றுத்திறனாளி மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவா்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், முழுநேர அல்லது பகுதி நேர ஆராயச்சிப் படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தோ்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழ்நாட்டை பூா்வீகமாகக் கொண்டதற்கான இருப்பிடச் சான்று ஆகியவற்றை ற சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com