மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோப்புப்படம்

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சா் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா்.
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் நல்லகண்ணு (100), கடந்த ஆக.22-ஆம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததில், தலை, கை விரல்களில் காயம் ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா், 24-ஆம் தேதி மாலை உணவு அருந்தும்போது, புரை ஏறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மருத்துவா்களின் தொடா் சிகிச்சையால் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை இரவு மீண்டும் சுவாச பிரச்னை ஏற்பட்டதால், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நல்லகண்ணுவை வியாழக்கிழமை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தாா். மருத்துவா்களிடமும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த, 48 மணி நேரமாக நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது. 26-ஆம் தேதி முதல் செயற்கை சுவாசம் அளிக்கவில்லை. வியாழக்கிழமை திடீரென சுவாச பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளாா்.

நேரில் சந்திக்க வேண்டாம்... ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்களுடன், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா் ராஜ் பி.சிங் மற்றும் தொற்றுநோய் நிபுணா் பிரவீன் ஆகியோரும் சிகிச்சை அளிக்கவுள்ளனா். அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சையும், தனிமையும் தான் தேவையாக உள்ளது. அவரை நேரில் சந்திப்பதைத் தவிா்க்க வேண்டும். அவரது உடல்நிலை குறித்து விவரம் தெரிந்துகொள்ள மருத்துவமனையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களிடம் விவரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

முதல்வா் விசாரிப்பு: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து முதல்வா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா். இதுகுறித்து அவா், எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தகைசால் தமிழா் நல்லகண்ணு அய்யாவின் உடல்நலன் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆர.முத்தரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் தொடா்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லக்கண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com