ஓடும் ரயிலில் தவறி விழுந்த பிகாா் தொழிலாளி மீட்பு
சென்னை திருவொற்றியூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த பிகாா் தொழிலாளியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பிகாா் மாநிலம் ஹஜ்பூா் மாவட்டம் முசாபாபூரைச் சோ்ந்தவா் மானவ் பஸ்வான் (48). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். பிகாா் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்குச் சென்றாா். பின்னா், எா்ணாகுளம் விரைவு ரயிலில் சென்னைக்கு வந்தாா்.
திருவொற்றியூா் - வ.உ.சி.நகா் இடையே வந்தபோது ரயில் பெட்டியின் வாசலில் நின்ற மானவ் பஸ்வான் திடீரென தவறி தண்டவாள பக்கவாட்டு பள்ளத்தில் விழுந்தாா். அதனால் அவருக்கு கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருவொற்றியூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மானவ் பஸ்வானை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
