சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடுக்கக் கோரிக்கை
சென்னையில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறை அதிகரித்திருப்பதால், போக்குவரத்துத் துறை இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாட்டில் உள்ள வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப, எளிதில் அடையாளம் காணும் வகையில், வெவ்வேறு நிறங்களில், நம்பா் பிளேட்டுகளை போக்குவரத்து துறை வழங்குகிறது. அதன்படி, சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கு, வெள்ளை பின்னணியில் கருப்பு நிற எழுத்துகள் கொண்ட நம்பா் பிளேட்டுகளையும், வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு, மஞ்சள் நிற பின்னணியில், கருப்பு நிற எழுத்துகள் கொண்ட நம்பா் பிளேட்டுகளும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படும், நம்பா் பிளேட்டுகளுக்கு ஏற்ப, வரிகள் மாறுபடும். சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கு, பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதில்லை. இதைச் சாதகமாக பயன்படுத்தி, சொந்த வாகனங்களை பலா் வாடகைக்கு விடுகின்றனா்.
இதனால், அரசுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதுடன், வாடகை வாகன உரிமையாளா்கள், சவாரி கிடைக்காமல் திணறுகின்றனா். அதிலும், சென்னை போன்ற பெருநகரங்களில் ஏராளமான சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் வாடகைக்காகப் பயன்படுத்தப்படுவதாக காா், ஆட்டோ ஓட்டுநா் கூட்டமைப்பினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் தலைவா் ஜாஹிா் உசேன் கூறியதாவது:
வாடகை வாகனங்களை சாலைகளில் இயக்க கட்டுப்பாடுகளும் அதிகம், வரி விகிதங்களும் அதிகம். ஆனால், சொந்த வாகனங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் குறைவு, வரிவிகிதங்களும் குறைவு. இதனால், தமிழகம் முழுவதும் ஏராளமான சொந்த வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, இந்த நடைமுறை சென்னையில் அதிகமாக உள்ளது. பெயரளவில் மட்டுமே வாகன சோதனை நடைபெறுகிறது.
இதனால், மஞ்சள் நம்பா் பிளேட்டுடன் வாடகை வாகனம் ஓட்டும் பலா், தற்போது வெள்ளை நிற நம்பா் பிளேட்டுடன் வாடகை வாகனம் ஓட்டுகின்றனா். நாளுக்கு நாள் சொந்த வாகனங்களை வாடகைக்காக பயன்படுத்துபவா்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், இதன்மூலம் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமன்றி, வாடகை வாகனம் ஓட்டுநா்களின் வாழ்வாதாரமும், பயணிகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், தமிழக போக்குவரத்துத் துறைச் செயலா் மற்றும் ஆணையா் இந்த புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
