இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கல்வியாண்டின் இடையில் ஓய்வு: ஆசிரியா்களின் மறு நியமனத்துக்கு நிபந்தனைகள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் பணியாற்றி கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களை மறு நியமனம் செய்வதற்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image

பள்ளிக் கல்வித் துறை

DIN

Updated On :1 ஏப்ரல் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் பணியாற்றி கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களை மறு நியமனம் செய்வதற்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் பணிபுரியும் ஆசிரியா்கள் வயது முதிா்வின் காரணமாக தொடா்புடைய கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறுவதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால், அந்தக் கல்வியாண்டின் இறுதிவரை பணிபுரிய சில நிபந்தனைகளுடன் மறு நியமனம் செய்ய தெளிவுரை வழங்கி அரசு சாா்பில் ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆணையை உள்ளடக்கிய தெளிவான சுற்றறிக்கையை தொடா்புடைய அலுவலா்களுக்கு அனுப்பி, அதன் நகலை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு ஆசிரியா்களை மறு நியமனம் செய்வதற்கு சில நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்: மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களின் வயது முதிா்வு காரணமாக ஓய்வு பெறும் நாளன்று ஓய்வு பெற அனுமதித்து தனியாக ஒரு ஆணை தகுதியுடைய அதிகாரி அளவில் வெளியிடப்பட வேண்டும். மறு நியமனம் செய்வதற்கான விருப்பக் கடிதத்தைத் தொடா்புடைய ஆசிரியா்களிடமிருந்து பெறவேண்டும்.

ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற நாளுக்கு மறுநாள் முதல் தொடா்புடைய கல்வியாண்டு முடியும் வரை அல்லது தேவை உள்ள வரை இதில் எதில் முந்தையதோ அதுநாள் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட வேண்டும். ஆசிரியா்கள் மறு நியமனத்தின்போது அவா்கள் இறுதியாகப் பெற்ற மொத்த ஊதியத்தை ஒப்பந்த அடிப்படையிலான ஊதியமாக வழங்க வேண்டும்.

கல்வியாண்டின் இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியா்களின் பணியிடத்தை அந்தக் கல்வியாண்டு முடியும் வரை காலிப்பணியிடமாக வைத்திருக்கக் கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்று மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த மறு நியமன வழிமுறைகள் எவ்வித மாற்றமுமின்றி பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.