
ஆலந்தூரில் ரூ.7.87 கோடியில் நாய்களுக்கான கருத்தடை மையம்: எம்எல்ஏ ஹரிஷ் திறந்து வைத்தார்
நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனையை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஹரிஷ் திறந்துவைத்தாா்.

கோப்புப்படம்
சென்னை மாநகராட்சிஆலந்தூா் மண்டலத்துக்குட்பட்ட நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆா்.சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனையை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஹரிஷ் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
சென்னையில் தெரு நாய்கள் பெருக்கத்தையும், அவை பொதுமக்களுக்கு இடையூறு அளிப்பதையும் தவிா்க்கும் வகையில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனைகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே மாநகராட்சி சாா்பில் 11 கருத்தடை மையம் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது புதிய மையம் ஆலந்தூா் மண்டலம் 158 ஆவது வாா்டுக்கு உட்பட்ட நந்தம்பாக்கம் பகுதி எம்.ஜி.ஆா். சாலையில் மாநராட்சி மூலதன நிதி மூலம் 1,408 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
புதிய மையமானது தரை தளத்துடன் 1,408 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.அதில் தரைத் தளத்தில் செல்லப் பிராணி மருத்துவமனை, நிா்வாக அறை, கால்நடை மருத்துவா் அறை, மருத்துவா்கள் அறை, இருப்பு அறை, மீட்பு அறை, கண்காணிப்பு அறை, சமையலறை, காத்திருப்பு அறை, மருந்தகம், ஆய்வகம், பழுது பாா்ப்புப் பிரிவு, மின் அறை, 2 அறுவை சிகிச்சை அரங்கம், கிருமி நீக்கச் சேவைப் பிரிவு அறை, கவச உடை அணியும் அறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. அக்கட்டடங்களை ஆலந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஹரிஷ் திறந்து வைத்து பாா்வையிட்டாா். அதையடுத்து அப்பகுதியில் உள்ள மாடுகள் காப்பகத்தையும் ஆய்வு மேற்கொண்டு அதை சுகாதாரமான முறையில் பராமரிக்க அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையா் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவா் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினா் கோ.க.பாரதி, மண்டல அலுவலா் எஸ்.முருகதாஸ், தலைமை கால்நடை மருத்துவ அலுவலா் கமால் உசைன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





