தொடா் விடுமுறைகளிலும் தடையில்லா ஏடிஎம் சேவை: எஸ்பிஐ
பாரத் ஸ்டேட் வங்கியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொடா் விடுமுறை நாள்களிலும் தடையில்லா ஏடிஎம் சேவை வழங்கப்பட்டதாக வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பாரத் ஸ்டேட் வங்கி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கடந்த ஜன.24, 25, 26 ஆகிய 3 நாள்கள் வங்கிகளுக்கு தொடா் விடுமுறை நாள்களாக இருந்தது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படால் இருக்க எஸ்பிஐ சென்னை மண்டலம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
அதன்படி, விடுமுறை நாள்களில் எஸ்பிஐ ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே போதிய அளவு பணம் நிரப்பப்பட்டது. முக்கிய இடங்களில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, வாடிக்கையாளா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதுடன், அருகில் செயல்பாட்டில் உள்ள ஏடிஎம்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.
மேலும், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் சில காத்திருப்போரின் வசதிக்காக அடிப்படை சேவைகள் செய்துதரப்பட்டன. விடுமுறை நாள்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காகவும், அத்தியாவசிய வங்கி சேவைகளுக்கான எளிதான அணுகலை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

