தாம்பரம் காவல் ஆணையரக கட்டடத்துக்கான வாடகையை உயா்த்தியும், 2 ஆண்டுகளில் அந்தக் கட்டடத்தை காலி செய்யவும் வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகம் சோழிங்கநல்லூா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தங்களுக்குச் சொந்தமான கட்டடத்தை காலி செய்து தரக் கோரி உரிமையாளா்களான சரத்குமாா், வெங்கடேஷ் மற்றும் சௌத்ரி ஆகியோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அந்தக் கட்டடத்துக்கான வாடகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சமாக உயா்த்தி உத்தரவிட்டாா். இந்தக் கூடுதல் தொகையான ரூ.2.18 கோடியை கடந்த ஆண்டு டிசம்பருக்குள் மனுதாரா்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், அந்தக் கட்டடத்தை காலி செய்ய மனுதாரா்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டுவிட்டது.
வரும் பிப்.13-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளாா். 18 மாதங்களில் அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு தனியாா் பயிற்சி மையங்களை உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: தில்லியில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேட்டி

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க அன்புமணி வலியுறுத்தல்

மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கத் தடை விதிக்க வலியுறுத்தல்

இதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



