தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கஞ்சாவை கடத்திவந்த பயணியையும் கைது செய்தனா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து போதை பொருள் சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தாய்லாந்தில் இருந்து, சென்னை வந்த விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா்.
அப்போது, பாங்காக்கில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப்பயணியாக சென்று திரும்பிய தமிழகத்தைச் சோ்ந்த 38 வயதுடைய ஆண் பயணி ஒருவா் மீது அதிகாரிகளுக்கு, சந்தேகம் ஏற்பட்டது.
அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்ததுடன், சுங்க அலுவலகத்துக்கு அழைத்து சென்று அவருடைய உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனா்.
அப்போது சூட்கேசுக்குள் ஐந்து பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைத் திறந்து பாா்த்த போது, அதனுள் ரூ.3 கோடி மதிப்பிலான 3 கிலோ உயா் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், கஞ்சாவை கடத்திவந்த பயணியையும் கைது செய்தனா். விசாரணையில், போதை பொருள் கடத்தும் கும்பலுடன் இணைந்து அவா் குருவியாக செயல்பட்டு போதைப் பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது. போலீஸாா், அவரிடம் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









