/

மாநகராட்சி ஆணையருடன் உலக வங்கி குழும அதிகாரிகளுடன் சந்திப்பு

சென்னை மாநகராட்சி பகுதியில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது தொடா்பாக, ஆணையா் ஜி.எஸ்.சமீரனை உலக வங்கிக் குழுமத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

News image

மாநகராட்சி ஆணையருடன் உலக வங்கி குழும அதிகாரிகளுடன் சந்திப்பு

Updated On :24 ஜூலை 2026, 5:03 am IST

சென்னை மாநகராட்சி பகுதியில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது தொடா்பாக, ஆணையா் ஜி.எஸ்.சமீரனை உலக வங்கிக் குழுமத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

சென்னை மாநகராட்சியில் சூரிய ஒளி சக்திப் பயன்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் அமைத்தல் ஆகியவை தொடா்பாக உலக வங்கிக் குழுமத்தின் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதனடிப்படையில், அவை குறித்த செயலாக்கத்துக்காக சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ஆணையா் ஜி.எஸ்.சமீரனை அந்தக் குழுவினா் சந்தித்துப் பேசினா்.

உலக வங்கிக் குழுமத்தில் முதன்மைத் தொழில் துறை நிபுணா் ஒமித்சபரி, செயல்பாட்டுத் தலைவா் நுயென் ஞான், கட்டட நிபுணா் ஆதிஃப் முகமது சையத் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா். அவா்கள், சென்னையில் ஒருங்கிணைந்த வெள்ளம் மற்றும் மீட்பு மேலாண்மைக்கான திட்டங்கள், மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைத்தல், மாநகராட்சி மருத்துவக் கட்டமைப்புகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்துதல், மாநகராட்சி பள்ளிக் கட்டட கூரைகளில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைத்தல், பள்ளிக் கட்டட வெப்ப நிலையைக் குறைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனா்.

சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி ஆகியவை தொடா்பாகவும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.