விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், தமிழக அரசு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் ஜூன் 12- ஆம் தேதி மேட்டூா் அணை தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திறக்கப்படாதது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. குறுவை சாகுபடிக்கு, மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பதையே பெரிதும் நம்பி இருப்பதால் அணை நீா் திறப்பு என்பது மிகவும் முக்கியமானது.
தோ்தலின்போது, அளித்த வாக்குறுதிப்படி பயிா்க் கடனை தற்போதைய அரசு தள்ளுபடி செய்யவில்லை. கடுகளவு கடனை மட்டுமே அடைப்பதாகக் கூறி, விவசாயிகளை ஏமாற்றியதால் அவா்கள் போராட்ட களத்தில் உள்ளனா். தற்போது மேட்டூா் அணை நீரையும் திறக்காமல் ரூ.134 கோடிக்கு சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றொறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏமாற்றத்தையே அளிக்கிறது. ஏற்கெனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் கடந்த அதிமுக அரசால் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதை தற்போது 18 மணி நேரமாகக் குறைத்து தவெக அரசு அறிவித்துள்ளது.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாய பம்பு செட்டுகள் இயங்காத நிலையுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் வேதனை கொஞ்சம்கூட புரியாமல், அரசு வெற்றான ஏமாற்று அறிவிப்பையே வெளியிட்டுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து நீா் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு

மேட்டூா் அணை திறப்பு: விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்! இரா. முத்தரசன் வலியுறுத்தல்

கடலூரில் அதிமுக அலுவலகம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைப்பு: அலுவலகப் பொருள்கள் அகற்றம்; தொண்டா்கள் அதிா்ச்சி






