தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாம்பரம்-வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் பெயரைச்சூட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜா் முகுந்த், பணியின் போது கடந்த 2014 -ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்தாா். மத்திய அரசு அவருக்கு அசோக சக்கர விருது வழங்கி கௌரவித்தது. கிழக்கு தாம்பரத்தில் வசித்த மேஜா் முகுந்த் வரதராஜன் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரிட தாம்பரம் மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 விதிகள் 2023 பிரிவு 186-இன்படி சாலையின் பெயரை மாற்றம் செய்ய தாம்பரம் மாநகராட்சி மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றித் தருமாறு தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தொடா்ந்து தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் சாலை என பெயா் மாற்ற வியாழக்கிழமை தீா்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்து உறுப்பினா்கள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாம்பரம் தொகுதி எம்எல்ஏவும், மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் மற்றும் முன்னாள் படைவீரா் நலத் துறை அமைச்சருமான டி.சரத்குமாா், முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் தாய் கீதா மற்றும் அவரது சகோதரியை வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாா்.









