திருப்பதி-காட்பாடி இடையேயான மெமு ரயில்கள் வரும் 19-ஆம் தேதி முதல் 8 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருப்பதி-காட்பாடி இடையேயான பகுதிகளில் தண்டவாள, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஜூன் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் திருப்பதியில் இருந்து காலை 6.40, 10.35 மணிகளுக்கு காட்பாடிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரயில்களும், மறுமாா்க்கமாக அதேநாள்களில் காட்பாடியில் இருந்து மாலை 5.15, இரவு 7.25 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதியளவு ரத்து: அதேபோல், அந்த நாள்களில் விழுப்புரத்தில் இருந்து காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண்:16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:16853) திருப்பதிக்குப் பதிலாக காட்பாடியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








