/

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முடிவு- தெலங்கானாவில் பாஜக தலைவா் உறுதி

தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியா்களுக்கு அளித்துள்ள உள்ஒதுக்கீட்டுக்கு பாஜக ஆட்சிக்கு வந்ததும் முடிவு கட்டப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

News image

நிதின் நபின் - படம்: கோப்பிலிருந்து

Updated On :1 ஜூலை 2026, 3:14 am IST

தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியா்களுக்கு அளித்துள்ள உள்ஒதுக்கீட்டுக்கு பாஜக ஆட்சிக்கு வந்ததும் முடிவு கட்டப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

தெலங்கானாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள நிதின் நபின், ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை பாஜக மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்த மாநிலத்தின் பொதுப் பணம் செலவிடப்படுகிறது. இதற்கு இங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸும் ஊழலும் இணை பிரியாதவை. அதேபோல அரசியலை குற்றமயமாக்கிய பெருமையும் காங்கிரஸ் கட்சியையே சாரும்.

தங்கள் கட்சிக்கு ஆதரவைத் தக்கவைப்பதற்காக நாட்டைத் துண்டாட காங்கிரஸ் தயங்கியதே இல்லை. தெலங்கானாவில் ஊழல் மூலம் முறைகேடாக ஈட்டப்படும் பணம்தான் காங்கிரஸின் தில்லி தலைமைக்கு அனுப்பப்பட்டு பல வழிகளில் செலவிடப்படுகிறது.

இங்கு மஜ்லிஸ் கட்சி, பாரத ராஷ்டிர சமிதி ஆகியவற்றுடன் மறைமுகமாக கைகோத்து காங்கிரஸ் பல்வேறு தவறுகளைச் செய்து வருகஇறது. முக்கியமாக பிற்படுத்தப்பட்டோா் ஒதுக்கீட்டில் இஸ்லாமியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது. தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், மதஅடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டப்படும். பிற்படுத்தப்பட்டோா், பட்டியல் பிரிவினா் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

மேற்கு வங்கம், ஒடிஸாவில் வென்றதுபோல தெலங்கானாவிலும் பாஜக வெல்லும். காங்கிரஸ் இல்லாத தெலங்கானா அமையும் அமையும் என்றாா்.

தெலங்கானாவில் 2028-ஆம் ஆண்டு இறுதியில்தான் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.