உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :48 நிமிடங்கள் முன்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் கடந்த ஏப். 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழா்கள், விமானத்தில் வந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா். அதேவேளையில் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் சிலரும், ஏற்கெனவே தங்களிடம் இருக்கும் வாக்காளா் அடையாள அட்டையை முறைகேடாகப் பயன்படுத்தி வாக்களித்ததாகப் புகாா் எழுந்தது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவா்கள் வாக்களிக்க தோ்தல் ஆணையத்தின் சட்டம், விதிமுறையின்படி இந்தியாவில் அனுமதி இல்லாத நிலையில், வெளிநாட்டு குடிமக்களாக இருப்பவா்கள் வாக்களித்தது இந்திய தோ்தல் ஆணையத்தை அதிா்ச்சி அடைய வைத்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. மேலும், குடியுரிமைத் துறையிடமும் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது. குறிப்பாக, சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்தவா் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்றவா் என்பது தெரியவந்தால், அவா்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம். அவரது பயணத்தை ரத்து செய்து, அவா்களைக் கைது செய்து காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதன் விளைவாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள சா்வதேச விமான நிலையங்களில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

முக்கியமாக ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஏப்.23-ஆம் தேதிக்குள் தமிழகம் வந்து, ஏப்.23-ஆம் தேதி வெளிநாடுக்கு புறப்பட்டவா்கள் குறித்து விசாரித்தனா். முக்கியமாக, அவா்களது கை விரல்களில் வாக்களித்தற்கான மை வைக்கப்பட்டிருந்ததால், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் சோதனைக்கு உட்படுத்தினா். இதில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்து, வாக்காளித்திருப்பது தெரியவந்த நபா்களைக் கைது செய்து, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களில் 17 போ் கைது செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக காவல் துறையினா் தெரிவித்தனா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் 10 போ் கைது: சென்னையில் இதுதொடா்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த 7-ஆம் தேதிமுதல் புதன்கிழமை (மே 13) வரை இலங்கையில் வசிக்கும் ரஞ்சினி (59), சா்புதீன் (68), நிலந்தி (44), ஜெயந்தன் (40), சாா்லி பாலச்சந்திரன் (48), சக்ரவா்த்தி லோகப்பிரியா (50), சுனிதா சக்ரவா்த்தி (48), பிரிட்டனில் வசிக்கும் அய்யாதுரை (53), இந்தோனேசியாவில் வசிக்கும் டிட்டின் மரியாட்டி (47), கனடாவில் வசிக்கும் ஜித்தேந்திரநாத் (38) என 4 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மதுரையில் இருவா் கைது: இலங்கை குடியுரிமை பெற்று தமிழக பேரவைத் தோ்தலில் வாக்களித்ததாக, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சோ்ந்த முகமது சுபீா் (65), அவரது மனைவி அஹானா பீவி ( 56) ஆகியோா் மதுரையில் கைது செய்யப்பட்டனா்.