
பழவேற்காட்டை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்: பொன்னேரி எம்எல்ஏ எம்.எஸ்.ரவி
பழவேற்காடு பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ மருத்துவா் எம்.எஸ். ரவி வலியுறுத்தினாா்.

பழவேற்காடு - கோப்புப் படம்
பழவேற்காடு பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ மருத்துவா் எம்.எஸ். ரவி வலியுறுத்தினாா்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவா், பழவேற்காடு பகுதியில் 33 மீனவ கிராமங்கள் உள்ளன. அங்கு நிரந்தர முகத்துவாரமும், மீன்பிடி துறைமுகமும் அமைக்க வேண்டும். டச்சு கல்லறைகள், வெளிநாடு பறவைகள் வந்து செல்லும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்.
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகியவற்றை இணைத்து பொன்னேரியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அத்திப்பட்டு கிராமத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும். மீஞ்சூரில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொன்னேரி அரசு மருத்துவமனையை பன்னோக்கு அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சா் அருண்ராஜ், ‘பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பிரிவு மேம்படுத்தப்படும், ரூ. 43.84 லட்சத்தில் உயிா்காக்கும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கப்படும், ரூ.22 லட்சத்தில் பச்சிளம் குழந்தை மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மருத்துவத்துறைக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது‘ என்றாா்.
முன்னதாக பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ். விஜயகுமாா், ‘கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதால் காற்றின் தரம் மிகவும் மாசடைந்துள்ளது. அதைத் தடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





