கிணற்றில் மூழ்கிய இரு மாணவர்கள் சாவு

திருக்கழுகுன்றம் புறவழிச் சாலை ஏரிக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
Updated on
1 min read

திருக்கழுகுன்றம் புறவழிச் சாலை ஏரிக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
சென்னை பல்லவன் குடியிருப்பு கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மோகனின் மகன் தருண்குமார்(17). இவரும், தரமணி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ரஞ்சித்குமார்(17), சென்னை பல்லவன் குடியிருப்பு, கண்ணகி நகரைச் சேர்ந்த பார்த்திபன்(19), பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் அருண்(17) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் சென்னை கந்தன்சாவடியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இந்நிலையில், பார்த்திபனின் சொந்த ஊரான திருக்கழுகுன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றது. 
இதில் கலந்து கொள்வதற்காக பார்த்திபனுடன் அவரது மூன்று நண்பர்களும் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர். வழியில், திருக்கழுகுன்றம் புறவழிச்சாலை ஏரிக்கரை அருகே உள்ள கிணற்றில் இறங்கிக் குளித்தனர். அவர்களில் தருண்குமாரும், ரஞ்சித்குமாரும் நீரில் மூழ்கினர். 
இதனால் பயந்து போன மற்ற இருவரும் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தனர். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து கிணற்றில் இறங்கி, மாணவர்களை மீட்பதற்குப் போராடினர். இறுதியில், நீரில் மூழ்கிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்து, திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் நிகழ்விடத்திற்கு வந்தார். மாணவர்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com