கருணை இல்லம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை: கோட்டாட்சியர் தகவல்

கருணை இல்ல விவகாரத்தில் ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜூ தெரிவித்தார். 
Updated on
2 min read

கருணை இல்ல விவகாரத்தில் ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜூ தெரிவித்தார். 
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே பாலேஸ்வரத்தில் தனியாருக்குச் சொந்தமான இறக்கும் தருவாயில் உள்ள ஆதரவற்றோருக்கான கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்துக்கு தாம்பரத்திலிருந்து காய்கறி வேனில், முதியோர் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு, இறந்த பிரேதத்துடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் வருவாய், சமூகநலம், மருத்துவம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்றனர். இதையடுத்து, அங்கு கருணை இல்ல உரிமையாளர் தாமஸிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அங்கு பெறப்பட்ட தகவலை ஆட்சியருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 
இதுகுறித்து கோட்டாட்சியர் ராஜூ கூறியதாவது: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தி, கருணை இல்ல நிர்வாகியிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு சான்றிதழ்கள், இல்லத்துக்கு வருவோர், இறப்போர் விவரங்கள் குறித்து விவரங்கள் முறையாக இல்லை எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், அங்கு பல்வேறு நிலையில் உள்ள வயதானோர், மனநலம் குன்றியோர், பல்வேறு மொழி பேசக்கூடியவர்கள், சிகிச்சை தேவைப்படுவோர் என நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். 
இதுதொடர்பாக அனைத்து ஆவணங்கள், பதிவேடுகள் கேட்கப்பட்டுள்ளன. எனவே, எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இதர துறைகளின் தகவல் அறிக்கையும் வர வேண்டும். பெறப்படும் தகவல்களை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து, ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்றோர் இல்லங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் கோட்டாட்சியர். 
மாவட்ட எஸ்.பி.சந்தோஷ் ஹதிமானி கூறுகையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் சேர்க்கப்படுவோர், இறப்போர் குறித்த பதிவேடுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தந்த துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அத்துடன், கோட்டாட்சியர் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, துறை ரீதியாக தகவல் அளித்த பின்பு, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு செப்டம்பர் வரையில் மட்டும்தான் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு அனுமதி உள்ளது. அதன்பிறகு, அனுமதி வேண்டி விண்ணப்பித்தனர். ஆனால், விண்ணப்பத்தில் பல்வேறு சான்றிதழ்களை இணைக்கக் கோரினோம். அதற்காக, கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இல்ல நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை. அதன்பிறகு, அனுமதியின்றியே கருணை இல்லம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. இல்ல விதிமீறல் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பியுள்ளோம். ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com