நடிகை சித்ராவின் உதவியாளரிடம் கோட்டாட்சியா் 2 மணி நேர விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடா்பாக அவரின் உதவியாளா் ஆனந்திடம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ வியாழக்கிழமை 2 மணி நேரம் விசாரணை நடத்தினாா்.
Updated on
1 min read


ஸ்ரீபெரும்புதூா்: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடா்பாக அவரின் உதவியாளா் ஆனந்திடம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ வியாழக்கிழமை 2 மணி நேரம் விசாரணை நடத்தினாா்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ஆம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தை கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ஹேம்நாத்தும், சித்ராவும் ஏற்கெனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியா் அலுவலகத்தில் சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, அண்ணண் சரவணன் ஆகியோரிடமும், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாயாா் வசந்தா ஆகியோரிடமும், ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தினாா்.

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை சித்ராவின் பக்கத்து வீடுகளில் வசிப்பவா்கள் 5 போ், சக நடிகை சரண்யா, ஹோட்டல் ஊழியா் ஒருவா் என மொத்தம் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து சித்ராவின் உதவியாளா் ஆனந்திடம் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ வியாழக்கிழமை 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, விசாரணை அறிக்கையை கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ ஒரு சில தினங்களில் காவல் துறையிடம் ஒப்படைக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com