காஞ்சிபுரத்தில் ரூ.289 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டுள்ளோம்: அறநிலையத்துறை அமைச்சர் 

13 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.289 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன்.
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 13 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.289 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டு சம்பந்தப்பட்ட கோயில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையாளர் அலுவலகம் காஞ்சிபுரத்தில் புதியதாக உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் ஏ.கே.தங்கவேலன் தெருவில் புதிய இணை ஆணையாளர் அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, அறநிலையத்துறையில் தமிழகம் முழுவதும் 9 இணை ஆணையாளர் அலுவலகங்கள் புதியதாக  தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரத்தில் 642 கோயில்களும், செங்கல்பட்டில் 732 உட்பட மொத்தம் 1374 கோயில்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 398 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட 13 கோயில்களுக்கு சொந்தமான 4,78,915 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.288.75 கோடி மதிப்புள்ள நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அவையனைத்தும் அந்தந்த கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பயணியர்கள் தங்கும் விடுதி ரூ.24.64 கோடி மதிப்பிலும், ஸ்ரீபெரும்புதூரில் ராமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி ரூ.6.64 கோடி மதிப்பிலும் புதியதாக கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார். இணை ஆணையர் அலுவலக திறப்பு விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், அறநிலையத்துறை இணை ஆணையர் சி.லெட்சுமணன், உதவி ஆணையர்கள் மா.ஜெயா(காஞ்சிபுரம்), செ.மாரிமுத்து(வேலூர்)ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.கே.பழனி,முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத்.பா.கணேசன், திருக்கோயில்களுக்கான அறங்காவலர் குழுத் தலைவர்கள் எல்லார்.செழியன்(காஞ்சிபுரம்) ஏ.எம்.பொன்னுச்சாமி(செங்கல்பட்டு)மற்றும் கோயில்களின் செயல் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com