காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனளிக்காது சனிக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவைச் சேர்ந்தவர் ஜெ.விஜயகுமார். இவரது மகள் வி.சுருதி(12), தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அச்சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காது சுருதி உயிரிழந்தார்.