காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாதக் குழந்தை பலி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாதக் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்விக்.
சாத்விக்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாதக் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பகுதி அன்னை காமாட்சி அவின்யு. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் குறுக்குத் தெருவில் மதுராந்தகம் வட்டத்தில் வேளாண் துறை அலுவலராக பணிபுரிந்து வரும் விஜயன் பிரியா தம்பதியினரின் 18 மாதக் குழந்தையான வி.சாத்விக் கடந்த ஞாயிறு அன்று காய்ச்சல் காரணமாக காஞ்சிபுரத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதன் பின் திங்கள்கிழமை இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதிக்கப்பட்டதில் குழந்தைக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு பலியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு கொசு தடுப்புப் பணியில் ஈடுபட்டதோடு, கொசு மருந்து அடித்தும் வீட்டில் உள்ள நபர்களின் உடல்நிலை குறித்து தகவல்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நத்தப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக அப்பகுதியில் ஆறுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் தேங்கி இருந்த நீரில் கொசு உற்பத்தியானதா?   அல்லது வீட்டினுள் இருந்த நீரினால் உருவானதா? என்பது குறித்தும் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே அப்பகுதியில் உள்ள பெண்மணிக்கு டெங்கு அறிகுறி ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த விவரத்தை சுகாதாரத் துறை, மாநகராட்சிக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாமில் குறிப்பாக குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வர வேண்டும் என  மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று அழைத்து வருகின்றனர். காஞ்சியில் டெங்குவிற்கு 18 மாதக் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி, அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி மேற்கொண்டு வரும் தடுப்புப் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் ஆய்வு மேற்கொண்டதோடு குழந்தையின் தாயாரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com