காஞ்சிபுரம் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு அவரோடு பணியாற்றிய சக காவலர்கள் நிதியுதவி செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுகாவில் சின்ன நாராசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார்-கோமளா தம்பதியரின் மூத்த மகன் சரண்ராஜ்(31) காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 15.10.2021 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பணியின் காரணமாக உத்தரமேரூரிலிருந்து செங்கல்பட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது எதிரில் வந்த லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது 21.10.21 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையும் படிக்க- கரோனா 3வது அலையை வெல்ல மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: ராதாகிருஷ்ணன்
குடும்ப சூழ்நிலை, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியன கருதி தமிழகம் முழுவதும் சரண்ராஜ் பணியில் சேர்ந்த 2013 ஆம் ஆண்டு அவரோடு பணியில் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் நண்பர்கள் ரூ.10 லட்சத்தை திரட்டிக் கொடுத்து உதவியுள்ளனர். இது குறித்து உயிரிழந்த காவலர் சரண்ராஜின் மனைவி பொற்கொடி கூறியது, காவலராக பணி செய்து வந்த என் கணவர் சரண்ராஜ் பணியில் சேர்ந்த 2013 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவல்துறை நண்பர்கள் அவரவர்களது வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகியனவற்றின் மூலம் தகவல் தெரிவித்து அதன் மூலம் எனது குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டு ரூ.10லட்சம் வசூலித்து கொடுத்துள்ளனர்.
இத்தொகை ஒவ்வொருவரும் விரும்பி கொடுத்த தொகையாகும். எனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இவர்களது மனித நேய உதவிக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே தெரியவில்லை. இத்தொகையை எனது மகள், மாமனார், மாமியார் ஆகியோர் பெயரில் தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளனர். மொத்த தொகை ரூ.10 லட்சம் எனவும் பொற்கொடி தெரிவித்தார்.