குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவி முன்பாக கணவரை கொலை செய்த 3 பேருக்கு விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக முன்பணம் பெற்றுள்ளார். இந்த நிலம் விற்பனை செய்வது தொடர்பாக செல்வத்துக்கும், ராஜ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவ நாளன்று செல்வம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் நந்தம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து ராஜ்குமாரும், அவரது நண்பர்களான கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மனைவி கண் முன்பாகவே செல்வத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்திருந்தனர். இவ்வழக்கு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு சார்பில் வழக்குரைஞர் சத்தியமூர்த்தி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.இளங்கோவன் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பினை தொடர்ந்து 3 பேரையும் குன்றத்தூர் போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.