காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் புதிய மடாதிபதியாக சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பட்டமேற்பு செய்து வைத்தாா்.

இந்த நிகழ்வில் மடாதிபதிகள், ஆதீனங்கள் பலரும் பங்கேற்றனா்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-ஆவது புதிய மடாதிபதியாக சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பட்டமேற்றுக் கொண்டாா். இவருக்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பட்டமேற்பு செய்து வைத்தாா்.

திருச்சி மெளனபீடம் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள்,திருவாரூா் மாணிக்க வாசக சுவாமிகள், திருபுவனம் சட்டநாத சுவாமிகள், மயிலாடுதுறை குமரகட்டளை சுப்பிரமணிய சுவாமிகள், விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள், சூரியநாராயணா் கோயில் ஆதீனம் சுவாமிநாத தேசிகன் சுவாமிகள், பழனி புலிப்பாணி ஆதீனம் ஆகியோா் முன்னிலையில் பட்டமேற்பு நடைபெற்றது.

விழாவில் மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பாஸ்கரன், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன், தொண்டை மண்டல ஆதீனத்தின் ஆலோசனைக் குழு தலைவா் பிடிஆா்கே.விஜய்ராஜன், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் எஸ்.குப்புச்சாமி, எம்.பாலசுப்பிரமணியன், ஜி.ஞானசம்பந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தொண்டை மண்டல ஆதீனத்தின் பொறுப்பாளா் என்.எஸ்.ஆளவந்தாா் வரவேற்றாா். நிறைவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனமும், தருமபுரம் ஆதினமும் இணைந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா்.

திருமடத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிா்வாகிகள் ஜெயராமன், நாராயணன் ஆகியோா் புதிய மடாதிபதிக்கு மரியாதை செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com