காஞ்சிபுரம்: மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இந்த கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் வீற்றிருப்பது போன்ற ஓவியம் வரையப்பட்ட விழா கொடி சிறிய பல்லக்கில் வைத்து ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் சிவ வாத்தியங்களுடன், மங்கல மேளங்களுடனும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதன் பின்னர் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து கோயில் ஸ்தானீகர்கள் கொடிமரத்தில் திருவிழாக்கொடியினை ஏற்றினார்கள்.பின்னர் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
கொடியேற்றத்தை தொடர்ந்து காமாட்சி அம்மன் வெள்ளி விருஷப வாகனத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயிலில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.