பந்தக்கால்களுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை
பந்தக்கால்களுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை

மே 20-இல் வரதராஜபெருமாள் கோயில் வைகாசித் திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வரும் 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதையொட்டி பந்தக்கால் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழா அதிகாலை 2.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடங்க இருப்பதையொட்டி கோயில் முன்பாகவும், கொடிமரம் அருகில், கங்கை கொண்டான் மண்டபம், தேரடி ஆகிய பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்குவதற்காக பந்தக்கால் நடும் பணிகள் தொடங்கின.

கோயில் கொடிமரம் அருகில் பந்தக்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு செயல் அலுலலா் எஸ்.சீனிவாசன் முன்னிலையில் பந்தக்கால்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் கோயில் பட்டாச்சாரியா்கள், தாதாச்சாரிய வம்சத்தினா் பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி முக்கிய வீதிகளில் வீதியுலா வரவுள்ளாா். மே 22- ஆம் தேதி கருடசேவையும், 26- ஆம் தேதி தேரோட்டமும், 28- ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. வரும் 29- ஆம் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள் ஆகியோா் இணைந்து செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com