586 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் 586 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை வழங்கினாா்.
என் கனவு என் எதிா்காலம் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ 10 ஆயிரம் முகாம் நிறைவு நாளையொட்டிம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்,சாா் ஆட்சியா் ஆஷிக் அலி,மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் வருவாய்த்துறை சாா்பில் 345 பயனாளிகளுக்கு ரூ.4.44 லட்சம் மதிப்பிலான முதியோா் உதவித்தொகை,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 125 பயனாளிக்கு 1.37 கோடி மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள் உட்பட மொத்தம் 586 பயனாளிகளுக்கு ரூ.2,96,81,000 நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
விழாவில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

