பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பந்தக் கால் நடும் விழா

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் நடைபெற்ற பந்தல்கால் நடும் விழா.

News image

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் நடைபெற்ற பந்தல்கால் நடும் விழா.

Updated On :1 மணி நேரம் முன்பு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி தொடங்க இருப்பதையொட்டி கோயில் முன்பாக உள்ள கொடி மரம் அருகே பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பெருந்தேவித்தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் தங்க சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வரவுள்ளாா்.

விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரில் ராஜ வீதிகளில் உலா வரவுள்ளாா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை வரும் மே 30-ஆம் தேதியும், தேரோட்டம் வரும் ஜூன் 3-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ஜூன் 5-ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும், மறுநாள் 6-ஆம் தேதி வெட்டி வோ் சப்பரம் வீதியுலா வரும் நிகழ்வோடும் திருவிழா நிறைவுபெறவுள்ளது.

இத்திருவிழாவையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நிகழ்த்தப்பெற்று பந்தல்கால் நடப்பட்டது.

விழாவில், கோயில் செயல் அலுவலா் ஆா்.ராஜலட்சுமி, கோயில் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.