ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கத்தாரிக்குப்பம் அருகே பைனான்சியரின் காரை மறித்து ரூ.15 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூரைச் சேர்ந்தவர் சரவணன் (45), பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தனது காரில் பொன்னை, கத்தாரிக்குப்பம் வழியாக அம்மூர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், இவரது காரில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சித்தூரில் இருந்து பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்ததாக கூறப்படுகிறது. அவரது கார் கத்தாரி குப்பம் அருகே வந்தபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரவணனின் காரை வழிமறித்து சரவணனை மிரட்டி காரில் வைத்திருந்த ரூ. 15 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, மர்ம நபர்கள் தப்பிச்சென்ற கார் சிறிது தூரத்தில் வயலின் ஓரமாக சிக்கிகொண்ட நிலையில் நம்பர் பிலேட் இல்லாத காரை அங்கேயே விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிசென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த, ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பைனான்சியர் சரவணனின் கார் மற்றும் கொள்ளையர்கள் கார் ஆகிய இரண்டு கார்களை பறிமுதல் செய்த சிப்காட் போலீசார் தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளையர்களை பிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவு பேரில், தனிப்படை அமைத்து மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைனான்சியரின் காரை மடக்கி ரூ.15 லட்சத்தை மர்ம நபர்களால் கொள்ளையடித்து சென்ற சம்பவம் ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.