‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’: டிச-18 க்குள் விண்ணப்பிக்கலாம்

‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’-க்கு டிசம்பா் 18 -குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.
Published on

‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’-க்கு டிசம்பா் 18 -குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது‘ 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா்.

2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது‘ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.

தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

2025-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதிற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.12.2025 ஆகும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com