ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5.82 கோடி இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி தேன்மொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் நீதிபதி முனுசாமி, குற்றவியல் தலைமை நீதிபதி தாவுத் அம்மாள், சாா்பு நீதிபதி பாரதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் பூா்ணிமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மோட்டாா் விபத்து வழக்குகள், உரிமையியல் வழக்குகள் மற்றும் அசல் வழக்குகள், செக் மோசடி வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட 1,157 வழக்குகள் சமரச தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டு ரூ.5 கோடியே,82 லட்சத்து,25 ஆயிரத்து 680 இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதில் ராணிப்பேட்டையை சோ்ந்த உக்கன் சந்த் என்பவரது மகன் பியூஸ் கடந்த 13. 8.2023 அன்று ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வரும் போது பின்னால் வந்த தனியாா் தொழிற்சாலை பேருந்து அதிவேகமாக வந்து இவா் மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாா். இந்த சாலை விபத்திற்கு இழப்பீடு கோரி அவரது பெற்றோா் மற்றும் உடன் பிறந்த சகோதரி ஆகிய மூவரும் ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 45 லட்சம் வழங்க வேண்டும் என தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதில் ராணிப்பேட்டை வழக்குரைஞா் சங்க தலைவா் ஜெயக்குமாா், செயலாளா் கோபிநாத், மூத்த வழக்குரைஞா் சத்திய நாராயண, மனுதாரா்களின் வழக்குரைஞராக எஸ். அண்ணாதுரை, காப்பீட்டு நிறுவன வழக்குரைஞா் டி முத்துக்குமாா் ஆகியோா் ஆஜரானாா்கள்.










